குடும்பத்தை ரொம்ப கேவலப்படுத்துறாங்க விஜய்சேதுபதி வருத்தம்

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறு செய்யும் வகையில் வலைதளங்களில் வலம் வரும் பதிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய விஜய் சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் தலைமைச் செயலாளர் குமரன் என்பவர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

காவல்துறை ஆணையரிடம் அளித்த அந்த புகார் கடிதத்தில் அகில இந்திய விஜய் சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் தலைமைச் செயலாளர் குமரன் கூறியதாவது: நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன் சன் டிவி தொலைக்காட்சியில்” நம்ம ஊரு ஹீரோ “என்ற நிகழ்ச்சியில் மறைந்த கதாசிரியரும் நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன் அவர்கள் ஒரு மேடையில் சொன்ன நகைச்சுவை துணுக்கை இந்த நிகழ்ச்சியில் மறு பதிவு செய்தார்.

இப்படி எதார்த்தமாக சொன்ன நகைச்சுவை துணுக்கு ஒன்றை சொன்ன பொருள் தன்மையிலிருந்து மாற்றி , இந்துக்களுக்கு எதிராக விஜய் சேதுபதி சொன்ன கருத்தாக திரித்து அந்த காணொளியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர் .

இந்த வதந்தியை தொடர்ந்து விஜய் சேதுபதியை எதிர்த்தும் ஆதரித்தும் வலைதளத்தில் ஒரு பெரும் சர்ச்சையே நிகழ்ந்து வருகிறது.இந்த சர்ச்சையில் தர்மத்தை பாதுகாக்கும் காவலர்களைப்போல் வாதிடுபவர்கள், தார்மீக தர்ம முறைகளை மீறி விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாகவும் தரம் தாழ்ந்தும் பதிவிடுகிறார்கள்.

இது விஜய் சேதுபதி அவர்களின் நற்பெயரை குலைப்பதோடு தேவையில்லாத வலைதள வாக்கு வாதங்கள் , சமுதாய நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் ஒரு தூண்டுகோலாக உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

அறிவுசார் சமூகத்தில் வாழும் நாம், தனிமனித கருத்துக்கள் வேறுபட்டிருந்தாலும், ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும், தனிமனித சுயமரியாதையை பாதிக்கும் விதமாக இருக்கக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது காழ்ப்புணர்ச்சிகாகவும், காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக் கூடாது.

அதனால் உடனடியாக விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றிய தரக்குறைவான , அறுவருக்கத்தக்க உள்ள பதிவுகளை அகற்றவும், இத்தகைய பதிவுகள் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்த சர்ச்சைக்குரிய அந்த காணொளியும் நீக்கப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அகில இந்திய விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்ற இயக்கத்தின் தலைமை செயலாளர் குமரன் காவல்துறை ஆணையருக்கு புகார் அளித்துள்ளார்.

Spread the love

Leave a Reply