சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவால் ரசிகர்கள் கண்ணீர்
நடிகர் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சார்ஜா கன்னட படங்களில் நடித்து வந்தார். பெங்களூரில் வசித்து வந்த அவர் நேற்று தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதுடன் மூச்சுவிடவும் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை பெங்களூர் ஜெயநகரில் இருக்கும் சாகர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதே அவருக்கு சுயநினைவு இல்லை. இந்நிலையில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாக இன்று மதியம் அறிவிக்கப்பட்டது. சிரஞ்சீவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி சார்ஜா 39 வயதில் இப்படி திடீர் என்று மரணம் அடைந்ததை கன்னட திரையுலகினராலும், ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார், சிரஞ்சீவி சார்ஜா இறந்துவிட்டார் என்பதை அறிந்து அதிர்ச்சியாக உள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.
சிரஞ்சீவி பற்றி நடிகை ப்ரியாமணி ட்வீட் செய்திருப்பதாவது, சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரின் சிரிப்பை ஒருபோதும் மறக்க முடியாது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சிரஞ்சீவி சார்ஜாவின் மரண செய்தி அறிந்து கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இளம் திறமையாளர் சீக்கிரமே சென்றுவிட்டார். அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே ட்வீட் செய்துள்ளார்.