தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூரில் 52 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 47 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 40 பேரும் பிற மாவட்டங்களில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 1,438 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,782 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 20,706 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.